Thursday, November 22, 2007

வங்க மக்களுக்கு உலக அறிஞர்களின் பகிரங்க கடிதம்

மேற்கு வங்க மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயல்வோர் குறித்து கவலை தெரிவித்தும், அதை முறியடிக்க வேண்டுகோள் விடுத்தும் நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் கூட்டாக ஒரு பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.
அக்கடிதம் வருமாறு:எமது வங்காள நண்பர்களுக்கு,மேற்கு வங்க நிகழ்வுகள் குறித்து எங்களை வந்தடையும் செய்திகள், அந்த மாநிலத்தில் எங்களில் சிலர் மேற்கொண்ட பயணங்களின்போது ஏற்பட்ட நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளுவதாக உள்ளன. ஒரே விதமான மாண்புகளைக் கொண்டுள்ள மக்களிடையே, இணைக்க முடியாத இடைவெளிகளை ஏற்படுத்தும் வகையில், பொது வெளியைப் பிளவுபடுத்தியுள்ள வெறுப்புணர்வு எங்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. அதுதான் எங்களுக்கு வேதனையைத் தருகிறது.
இந்த இடைவெளியின் இரு மருங்கிலும் உள்ளவர்கள் சொல்வது எங்கள் காதில் விழுகிறது; அதிலிருந்து நிகழ்வுகள் குறித்தும் அவற்றின் இயக்குவிசைகள் குறித்தும் ஓரளவு புரிந்து கொள்ள முயல்கிறோம். நம்மிடையே உள்ள தொலைவு, எதையும் திட்டவட்டமாக கூறவியலாமல் எங்களைத் தடுக்கிறது.மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட (நிலச் சீர்திருத்தம், உள்ளாட்சி போன்ற) சில முக்கியமான பரிசோதனைகளை, சில பிரச்சனைகள் மீதான கருத்து வேறுபாடுகள் கிழித்துப் போட்டுவிட வங்காள மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்.வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விவசாயிகளோடு எங்களது முழுமையான ஒருமைப்பாட்டை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நந்திராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ரசாயனத் தொழில் வளாகம் அமைக்கப்பட மாட்டாது என்று மேற்கு வங்க அரசு உறுதி அளித்திருப்பதாக நாங்கள் அறிகிறோம்.
வன்முறையால் வெளியேற்றப்பட்டவர்கள் இப்போது பழிவாங்கல் ஏதுமின்றித் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடிகிறது என்பதும் எங்களுக்குத் தெரியவருகிறது. நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் நடப்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாங்கள் விரும்புவதும் அதுதான்.
உலக சக்திகளின் இன்றைய வலிமை நிலைகள் காரணமாக, இடதுசாரி சக்திகளைத் துண்டாடுவது ஒரு மூர்க்கத்தனமான பாதிப்புகளுக்கு இட்டுச் சென்றுவிடக்கூடும். ஒரு நாட்டின் (இராக்) அரசைத் தகர்த்த ஒரு உலகமகா ஆதிக்க சக்தி, இப்போது இன்னொரு நாட்டையும் (ஈரான்) தகர்ப்பதற்குத் தயாராகி வருவதைப் பார்க்கிறோம். எனவே, வேறுபாட்டிற்கான அடிப்படைகள் இனியும் இல்லை என்ற நிலையில், இது பிரிந்து நிற்பதற்கான தருணம் அல்ல.-
இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர்:நோம் சோம்ஸ்கி(நூலாசிரியர்: `தோல்வியடைந்த அரசுகள்- தவறான அதிகாரமும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும்')தாரிக் அலி(நூலாசிரியர்: `கரீபிய கொள்ளைக்காரர்கள்', ஆசிரியர்: `நியூ லெஃப்ட் ரிவ்யூ')ஹோவர்ட் ஜின்(நூலாசிரியர்: `அரசாங்களால் அடக்க முடியாத சக்தி')சூசன் ஜார்ஜ்(நூலாசிரியர்: `மற்றொரு உலகம் சாத்தியமே', இணையாசிரியர்: `எதிரியுடன் யுத்தம்- குவாண்டா நாமோவுக்கு ஒரு பிரிட்டிஷ் முஸ்லிமின் பயணம்', முன்னாள் ஆசிரியர்: `கார்டியன்')வால்டன் பெல்லோ(நூலாசிரியர்: `ஆதிக்கக் குழப்பங்கள் - அமெரிக்க சாம்ராஜ்யத்தின் தகர்வு')மகமூத் மம்தானி(நூலாசிரியர்: `குட் முஸ்லிம், பேட் முஸ்லிம்: அமெரிக்கா', `பனிப் போரும் பயங்கரவாத வேர்களும்')அகீல் பில்கிரானி(நூலாசிரியர்: `அரசியலும் அடையாளத்தின் தார்மீக மனநிலையும்')ரிச்சர்ட் ஃபால்க்(நூலாசிரியர்: `யுத்தத்தின் விலை - சர்வதேச சட்டமும் ஐ.நா. அமைப்பும்', `இராக்குப்பின் உலகம்')ஜீன் ப்ரிக்மான்ட்(நூலாசிரியர்: `மானுட ஏகாதிபத்தியம் - யுத்த விற்பனைக்காக மனித உரிமைகளை பயன்படுத்துதல்')மைக்கேல் ஆல்பர்ட்(நூலாசிரியர்: `பாரகான்- முதலாளித்துவத்திற்கு பின் வாழ்க்கை', ஆசிரியர்: `இசட்-நெட்'ஸ்டீபன் ஷாலோம்(நூலாசிரியர்: `ஏகாதிபத்திய புளுகுகள் - பனிப்போருக்குப் பிந்தைய அமெரிக்கத் தலையீடுகளை நியாயப்படுத்துதல்')சார்லஸ் டெர்பர்(நூலாசிரியர்: `லாபத்திற்கு முன் மக்கள் - பயங்கரவாத யுகத்தில் புதிய உலகமயமாக்கல்')விஜய் பிரசாத்(நூலாசிரியர்: `இருளடைந்த நாடுகள் - மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் வரலாறு')தமிழில்: அ.குமரேசன்

No comments: